லெபனானுக்கு 37 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி வழங்கும் கனடா
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிரமடைந்துள்ள மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் சிவிலியன்களுக்கு 37 மில்லியன் டொலருக்கும் அதிகமான மனிதாபிமான உதவியை வழங்க கனடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான இராஜாங்கச் செயலாளர் ரந்தீப் சாராய் (Randeep Sarai), வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் குடிவரவு அமைச்சர் லீனா தியாப் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிதி ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள், செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) மற்றும் ஆக்ஸ்பாம் கியூபெக் போன்ற அமைப்புகளின் ஊடாக லெபனான் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், மோதல்களால் சேதமடைந்துள்ள மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை மீளமைக்க உதவி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல் லெபனான் மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர்கள் தங்களின் விருப்பத்திற்கு மாறாக இந்த வன்முறைக்குள் இழுக்கப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் அனிதா ஆனந்த் கவலை வெளியிட்டுள்ளார்.
பெப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 7 இலட்சம் முதல் 8 இலட்சம் வரையிலான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் லெபனான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் காரணமாக பல சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன