எபோலாவிற்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் கனடிய விஞ்ஞானிகள் முன்னேற்றம்
உலகையே அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பாதிப்பிற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய தொற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலான புதிய மருந்து ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கனடாவின் மாண்ட்ரியல் நகர ஆராய்ச்சியாளர்கள் குழு முக்கிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
மாண்ட்ரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (IRCM) விஞ்ஞானிகள், "தாவரங்களில் இருந்து கண்டறியப்பட்ட ஒரு புதிய ஆன்டிவைரல்" மூலக்கூறு இதில் நல்ல பலனைத் தந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
IRCM நிறுவனத்தின் செயல்பாட்டு எண்டோபுரோட்டியோலிசிஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த டாக்டர் மிஷெல் கிரெட்டியன் மற்றும் டாக்டர் மஜம்பு மிபிகேய் ஆகியோர் தலைமையிலான குழுவே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

எபோலா வைரஸ் மற்றும் கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தும் 'SARS CoV 2' ஆகியவற்றுக்கு எதிராக வலுவாகச் செயல்படக்கூடிய ஒரு புதிய இயற்கை மூலக்கூறு குடும்பத்தை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மருந்து முழுமையாக வெற்றி பெற்றால், எபோலா நோய் பரவாமல் தடுப்பதற்கும், ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட குணமடையவும் இது பெரிதும் உதவும். "நாங்கள் தொடர்ந்து இதில் பணியாற்றி வருகிறோம். தாவரங்களில் இருந்து கண்டறியப்பட்ட இந்த ஒரு குறிப்பிட்ட மருந்து மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது.
தற்போதைய நிலையில் இது மனிதர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய இறுதி மருந்து என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அதற்கான அனைத்து நல்ல அறிகுறிகளையும் இது கொண்டுள்ளது என டாக்டர் மஜம்பு தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அடுத்த கட்டமாக விலங்குகள் மீதான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் (Fall) விலங்குகள் மீதான பரிசோதனை அடுத்த கட்டத்தை எட்டும் என நம்புகிறோம். வின்னிபெக்கில் உள்ள புதிய ஆய்வக வசதிகள் மூலம் விலங்குகளில் இது நல்ல பலனைத் தந்தால், அதன் பிறகு மனிதர்களுக்கான மருந்தாக இதனை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்குவோம் என்று டாக்டர் மிஷெல் கிரெட்டியன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மருந்து எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்பதற்கான காலக்கெடுவை இப்போதே கணிக்க முடியாது என இக்குழுவினர் கூறியுள்ளனர்.