காசாவில் ஐ.நா, உதவி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்! கனடா வலியுறுத்தல்
காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்கள் மற்றும் மனிதநேயம் சார்ந்த உதவி பணியாளர்களை குறிவைத்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு கனடா அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் ”யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நடவடிக்கைகள் விரைவாகவும் முழுமையாகவும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்” எனவும் கனடா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சகம் தனது தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ”உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைகள்,
உலக உணவு திட்டத்தின் (WFP) உதவி பேரணிகள் மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களை ஏற்க முடியாதவை என்றும், அப்பகுதியில் வாழும் மக்கள் பசி மற்றும் தண்ணீர் இன்மையால் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்“ எனவும்குறிப்பிட்டுள்ளது.
மேலும், “காசா பகுதியில் நிலவியுள்ள மனிதாபிமான அவசர நிலை தீவிரமடைந்துள்ளது. எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான மனிதஉதவி நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது அவசியம்” எனவும் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான சர்வதேச அழுத்தத்தின் பின்னர், காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு, சுகாதார சேவைகள் வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.