பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு கனடாவின் பயண எச்சரிக்கை
பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு கனடா, பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
பிரான்ஸ் அரசு, கோடை முதல் கிறிஸ்துமஸ் வரையிலான காலகட்டத்திற்காக பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அத்திட்டம், அனுமதியின்றி ட்ரோன்கள் பறப்பதைக் கட்டுப்படுத்துவது, சுற்றுலாத்தலங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் பொது மற்றும் அரசு கட்டிடங்களுக்கான பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பானதாகும்.
அதாவது, மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஆபத்து அதிகரித்துள்ளதால், அது தொடர்பான நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுத்துவருகிறது.
ஆக, பிரான்சில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம் என பிரான்சே அறிவித்துள்ளதால், அங்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறு கனடா அறிவுறுத்தியுள்ளது.
பிரான்சில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், ஈபிள் கோபுரம் சீக்கிரமாக மூடப்படுவது, விழாக்களின்போது வாணவேடிக்கைகளுக்குத் தடை போன்ற நடவடிக்கைகள் விதிக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளை பிரான்ஸ் அரசு எடுத்துவருகிறது.

காட்டுத்தீ அபாயம் நிலவுவதால், வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் போன்ற இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, கனேடியர்கள் விதிகளைப் பின்பற்றுமாறும், அபாயகரமான இடங்களைத் தவிர்க்குமாறும் கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பாரீஸ் போன்ற இடங்களில், பேச்சுக்கொடுத்து கவனத்தைத் திருப்பியும், ஜூஸ் போன்றவற்றை மேலே வேண்டுமென்றே கொட்டியும், கவனத்தை திசை திருப்பி திருடும் கூட்டம் உள்ளதாகவும், ஆகவே கனேடியர்கள் தங்கள் பாஸ்போர்ட் போன்ற விடயங்களை தனியாக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும், பாஸ்போர்ட் நகல் ஒன்றை தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் வைத்துக்கொள்ளுமாறும், கையில் அதிக அளவில் ரொக்கம் கொண்டு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.