உக்ரேனிய படையினருக்கு பயிற்சி அளிக்கவுள்ள கனடிய ஆயுதப் படை
புதிய உக்ரேனிய ஆட்சேர்ப்புப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க 225 கனடிய ஆயுதப் படை (CAF) பணியாளர்களை அனுப்புவதற்கு கனடா அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனை கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். கனடாவின் இராணுவப் பயிற்சி மற்றும் உக்ரைனில் திறன் மேம்பாட்டுப் பணியின் கீழ், கனடிய ஆயுதப் படையானது இங்கிலாந்திற்கு பணியாளர்களை அனுப்பும் எனவும் அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் அவர்களில் பெரும்பாலோர் பயிற்சியாளர்களாக பணிபுரிவார்கள் எனவும் ஆரம்ப நிலைப்பாட்டில் சுமார் நான்கு மாதங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 90 வீரர்களைக் கொண்ட மூன்று பயிற்சிக் குழுக்களில் முதலாவது குழு ஒகஸ்ட் 12ம் திகதி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பயிற்சி நடவடிக்கைகள் தென்கிழக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள ஒரு இராணுவ தளத்தில் நடைபெறும் என தெரிவித்த கனேடிய பாதுகாப்பு அமைச்சர், மேலும் முன்னணிப் போருக்குத் தேவையான தனிப்பட்ட திறன்களை மையமாகக் கொண்ட நெகிழ்வான பயிற்சிகள் வழங்கப்படும்.
உக்ரேனிய வீரர்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், போர்க்களத்தில் முதலுதவி, களப்பணி, ரோந்து உத்திகள் மற்றும் ஆயுத மோதல் சட்டம் உட்பட பல விடயங்கள் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை உக்ரேனிய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் 2015 ஆம் ஆண்டில் ஆபரேஷன் UNIFIER தொடங்கப்பட்டது, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் 2025 வரை விரிவாக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டது.
மேலும் நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து, 33,000 உக்ரைனிய இராணுவம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு போர்க்கள தந்திரோபாயங்கள் மற்றும் மேம்பட்ட இராணுவ திறன்களில் கனடிய ஆயுதப்படை பயிற்சி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.