கியூபாவுக்கான பயண எச்சரிக்கையை கனடா புதுப்பிப்பு
கியூபாவில் மின்சாரம், எரிபொருள் மற்றும் அடிப்படை தேவைகள் கடுமையாக தட்டுப்படுகின்ற நிலையில், அந்த நாட்டிற்கு பயணம் செய்யும் கனடியர்கள் அதிக அளவிலான எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என கனடா அரசு தனது பயண அறிவுறுத்தலை புதுப்பித்துள்ளது.
இந்த தட்டுப்பாடுகள் சுற்றுலா விடுதிகளிலும் (resorts) பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“நிலைமை கணிக்க முடியாததாக உள்ளது. குறுகிய கால அறிவிப்பில் விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும்,” என பயண அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார வலையமைப்பின் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்காக, கியூபா அரசு தினசரி நீண்ட நேர மின்தடை அட்டவணைகளை அமல்படுத்தி வருகிறது.
இருப்பினும், எதிர்பாராத நாடளாவிய மின்தடைகள் ஏற்படக்கூடும் என்றும், அவை 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கலாம் என்றும் ஒட்டாவா எச்சரித்துள்ளது.
மேலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியுபா முழுவதும் பயணம் செய்வது மிகவும் கடினமாகியுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவைகள் அடிக்கடி பாதிக்கப்படுவதுடன், சில பயணிகள் வாடகை வாகனங்களுடன் தற்காலிகமாக சிக்கித் தவித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காரணமாக மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
கியூபாவில் தற்போது உள்ள கனடியர்கள், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும், அவசர நிலைகளில் உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக Registration of Canadians Abroad சேவையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.