cupcake-ல் போதை மருந்து... கனேடிய பெண் இராணுவ வீரரின் பதவி பறிப்பு
கனடாவில் சக வீரர்களுக்கு கஞ்சா கலந்த கப்கேக்குகளை அளித்த விவகாரத்தில் பெண் இராணுவ வீரரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் பாம்பார்டியர் செல்சியா காக்ஸ்வெல் என்பவருக்கு நியூ பிரன்சுவிக் இராணுவ நீதிபதியால் வெள்ளிக்கிழமை தண்டனை விதிக்கப்பட்டது.
28 வயதான காக்ஸ்வெல் மீது, தீங்கிழைக்கும் பொருளைக் கொடுத்ததாக எட்டு குற்றச்சாட்டுகளும் அவமானகரமான முறையில் நடந்து கொண்டதாக ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
கனேடிய இராணுவ வரலாற்றிலேயே இதுப்பொன்ற ஒரு வழக்கு விசாரணை முதன்முறை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள காக்ஸ்வெல்லுக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனையும், கனேடிய ஆயுதப் படைகளில் இருந்து நீக்கம் செய்வதாகவும் தீர்ப்பு வழங்கினார்.
கடந்த ஜூலை 2018ல் காக்ஸ்வெல் மொபைல் கேன்டீன் ஒன்றை நடத்தி வந்தபோது தமது வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் கப்கேக்குகளை எட்டு வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.
குறித்த கப்கேக்குகளை சாப்பிட்ட வீரர்களில் ஒருவர் வேலை மற்றும் குடியிருப்பை இழந்துள்ளார். இன்னொருவர் சாலைவிபத்தில் சிக்க நேர்ந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
காக்ஸ்வெல் குடும்ப உறுப்பினர்கள் பலர் கனேடிய இராணுவத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதால், அவர்கள் சார்பாக இராணுவ நீதிமன்றத்திற்கு கடிதங்களும் எழுதியுள்ளனர்.
இருப்பினும், அவருக்கு 30 நாட்கள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், கனேடிய ஆயுதப் படைகளில் இருந்து நீக்கம் செய்வதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.