வெளிநாட்டு விஜயங்கள் அத்தியாவசியமானவ – கனடிய பிரதமர்
தனது அண்மைய வெளிநாட்டு பயணங்களும் உலகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புகளும், கனேடியப் பொருட்களுக்கு புதிய சந்தைகளைத் திறப்பதற்கு அவசியமானவை என கனேடிய பிரதமர் மார்க் கார்னி,தெரிவித்துள்ளார்.
கனடிய பிரதமர் தற்பொழுது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் உடனான சந்திப்பில், ஜூன் மாதத்தில் ஒட்டாவாவில் எட்டிய ஒப்பந்தங்களின் முன்னேற்றம், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உக்ரைன் மற்றும் காசா போர்கள் உள்ளிட்ட சர்வதேச முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இது கனேடியர்களுக்கு நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் நீண்டகால நலன்களையும் தரும் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த முதலீட்டிற்கான ஒரு பகுதி வெளிநாடுகளிலிருந்தே வர வேண்டும் என கார்னி தெரிவித்துள்ளார்.
லண்டனில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே, கார்னியின் வெளிநாட்டு பயணங்கள் "லிபரல் அரசின் அரசியல் நாடகம்" மட்டுமே என்றும், கனடாவின் உள்நாட்டு பிரச்சினைகளான குற்றச்செயல்கள் மற்றும் வாழ்வாதாரச் சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.