கெரி ஆனந்தசங்கரிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரதமர்
ஈழத் தமிழரும் கனடிய பிரஜையுமான பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கெரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்காக ஆனந்தசங்கரி 2016 மற்றும் 2023-ல் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 2023-இல் கெரி ஆனந்தசங்கரி நீதித் துறைக்கான பாராளுமன்ற செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த வாரம் கனடா நீதிமன்றம், அந்த நபரின் கடைசி முறையீட்டையும் நிராகரித்தது.
தேசிய பாதுகாப்பும், பொது பாதுகாப்பும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது.
2023-இல் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய கடிதங்களை எழுதுவதை நிறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாக்காளர்களுக்காக ஆதரவு கடிதங்கள் எழுதுவது வழக்கமான செயலாகும் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதானல் வேறும் தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.
எனினும்,கனடாவில் இயங்கி வரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அமைப்பு ஒன்றின் பிரதானி ஷெரில் சபேரியா, இதை ஒரு முக்கிய தவறான முடிவாகக் குறிப்பிடுகிறார்.
ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்குவது எவ்வித ஏற்புடையதல்ல எனவும். இது நாடு முழுக்க பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சீர்குலைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஆனந்தசங்கரி பதவியில் தொடரக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
இது போல் கடிதம் எழுதியவர்கள், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கவே கூடாது என எதிர்க்கட்சி செனட் தலைவர் லியோ ஹூசாகோஸ் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.