ஒன்டாரியோவில் பள்ளி பேருந்து மோதி 9 வயது சிறுவன் உயிரிழப்பு
ஒன்டாரியோ மாகாணத்தின் அல்மொன்ட் பகுதியில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஒரு பள்ளி பேருந்து மோதியதில் 9 வயது சிறுவன் உயிரிழந்தார்.
ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் (OPP) இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். பாடசாலை முடிவடைந்த பின்னர் சுமார் மாலை 3.40 மணியளவில், சைக்கிளில் சென்ற சிறுவன் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
டெய்ட் மெக்கென்ஸீ R. Tait McKenzie என்ற அரசுப் பள்ளியின் மாணவரே இவ்வாறு உயிரிழந்தார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஹோலி நேம் ஒப் மேரி Holy Name of Mary கத்தோலிக்கப் பள்ளி எதிரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தைப் பார்த்த பள்ளி ஆசிரியர்கள், சிறுவனின் உயிரைக் காக்கும் அவசர முயற்சிகள் மேற்கொண்டாலும் முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சோகமான சம்பவம் மாணவர்களும் ஆசிரியர்களும் அருகில் இருந்தபோது இடம்பெற்றது எனவும் ஒன்டாரியோ காவல்துறையின் சார்பாக சிறுவனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் செய்தி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் உள்அதிர்வையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.