தங்களுக்கு கொரோனா இருப்பது தெரியாமலே கொரோனாவை சுமந்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
சிறுவர்களும் பதின்மவயதினரும், தங்களுக்கு கொரோனா இருப்பது தெரியாமலே கொரோனாவைச் சுமந்துகொண்டிருக்கலாம் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தங்களுக்கு கொரோனா இல்லை என சோதனை முடிவுகள் வந்தும், சிறுவர்கள் பலரும், பதின்மவயதினரும், தங்களுக்குத் தெரியாமலே கொரோனாவை சுமந்துகொண்டிருக்கலாம் என்னும் அதிர்ச்சியளிக்கும் விடயம் ஒன்று, ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
மொன்றியலில், Encore என்ற பெயரில் 1.632 சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், சராசரியாக 5.8 சதவிகிதத்தினர் உடலில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால், அவர்களில் பலருக்கு கொரோனா சோதனையில் கொரோனா இல்லை என்ற முடிவு வந்திருந்திருக்கிறது. ஆகவே, இதேபோல நமக்குத் தெரியாமலே இன்னும் ஏராளமானோர் இருக்கலாம் என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் ஆய்வில் பங்கேற்ற குழந்தைகள் நால்வரின் தாயான Erin Morehouse.
மேலும், இந்த ஆய்வின் முடிவுகளில், 2020அக்டோபர் முதல் 2021 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், அந்த சிறுவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் அதிக அளவில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதால், சிறுவர்களுக்கிடையே கொரோனா பரவல் அதிகமாக இருந்துள்ளது என்பதைக் காட்டும் ஒரு அறிகுறியாக இது கருதப்படுகிறது.
ஆகவே, 12 முதல் 17 வயது வரையுள்ள அனைவருக்கும் அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்கு முன் தடுப்பூசி போட்டுவிடுவதென அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம், கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் ஒரு நல்ல படியாக அமையும் என நுண்ணுயிரியலாளர்கள் கருதுகிறார்கள்.