ஏழ்மையில் தவிக்கும் கனேடிய சிறார்கள்: வெளியான புதிய ஆய்வறிக்கை
கனடாவில் 2019ல் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு சிறார் ஏழ்மை நிலையில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில், கனடாவில் ஏழ்மையில் பரிதவிக்கும் சிறார்களின் மொத்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கனடாவில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் சிறார்களின் மொத்த எண்ணிக்கையானது 1.3 மில்லியன் என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, ஒட்டுமொத்த கனடாவில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகமாக வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சிறார்களின் இந்த முக்கியமான வயதில் காணப்படும் அதிக வறுமை விகிதம், கல்வி மற்றும் தொழில்சார் சாதனைகளில் வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
வெளியான ஆய்வறிக்கையின்படி, 2018 மற்றும் 2019 க்கு இடையில் குழந்தைகளின் வறுமை விகிதம் அரை சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 24,000 குழந்தைகள் மட்டுமே வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாக குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதே விகிதத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், கனடாவில் சிறார்களில் ஏழ்மைநிலையை போக்க 54 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் சிறார் வறுமை பிரதான பிரச்சினையாக இருக்கும் அதே வேளையில், நுனாவட்டில் இந்த விகிதம் அதிகபட்சமாக 34.4 சதவீதமாக உள்ளது.
கனேடிய மாகாணங்களிலேயே அதிகமாக குழந்தைகள் வறுமையில் இருக்கும் பகுதி மனிடோபா எனவும் இங்கு அதன் எண்ணிக்கை 28.4 சதவீதம் எனவும் பதிவாகியுள்ளது.
மேலும், கியூபெக், ஆல்பர்ட்டா, ஒன்ராறியோ மற்றும் யூகோன் ஆகிய பகுதிகள் மட்டுமே குழந்தைகளின் வறுமை விகிதங்களை தேசிய சராசரியை விட குறைவாக பதிவு செய்துள்ளன.
மட்டுமின்றி, வெளியான அறிக்கையின்படி, 25.5 சதவீத இன ரீதியான பிள்ளைகளும், 35 சதவீத புலம்பெயர்ந்த குழந்தைகளும் வறுமையில் வாடுகின்றனர்.
ஊனமுற்றவர்களில் 41 சதவீத மக்கள் ஏழ்மையில் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.