1.40 லட்சம் வீரர்கள், 953 கப்பல்கள்: போருக்கு தயாராகும் சீனா?
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ ஒன்று ஊடகங்களில் கசிந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஓடியோவில், 1.40 லட்சம் இராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், ரஷ்யா பாணியில் தைவான் மீது சீனா படையெடுப்பை நடத்துமோ என்ற அச்சம் தைவான் மக்களிடையே எழுந்துள்ளது.
சீனாவில் கடந்த 1949ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.
மட்டுமின்றி, தேவையெனில் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.
மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.