மிகக் கடுமையான தாக்குதல் நடத்துவோம் ; ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
"நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம், அதுவும் மிகக் கடுமையான தாக்குதலை நடத்துவோம்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வதற்காக ஈரான் "விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று தான் முன்னர் கூறிய கருத்தை தெளிவுபடுத்துமாறு ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, ட்ரம்ப் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை ஆரம்பிக்கும் என்பதை இது குறிக்கிறதா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "ஆம், உலங்கு வானூர்தி சம்பவத்தின் அடிப்படையில், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமை உண்டு என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார்.
ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) மேலாக அமெரிக்காவின் அபாச்சி (Apache) ரக உலங்கு வானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, ஈரான் மீது தனது நிர்வாகம் "மிகக் கடுமையான" தாக்குதல்களை நடத்தும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் தலைவர்கள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
"அவர்கள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும், இது ஒரு நல்ல உடன்படிக்கை" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ட்ரம்ப், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் ஈரான் "ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத்" தடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.