ட்ரம்ப்பின் தாக்குதல் எச்சரிக்கைக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து ஈரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தனது நாடு எந்தவொரு அழுத்தத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிராக "உறுதியுடன் நிற்கும்" என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஈரானின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து விடுக்கப்படும் எச்சரிக்கைகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"போக்குவரத்து வலையமைப்புகள் முதல் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத் தொழில்துறைகள் வரையிலான உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், ஒரு நாட்டின் மனவலிமைக்கு முன்னால் அவர்களின் பலவீனத்தையே காட்டுகின்றனவே தவிர, அது அவர்களின் பலத்தை நிரூபிக்கும் செயலல்ல" என ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா "மிகக் கடுமையான தாக்குதலை" நடத்தும் என ட்ரம்ப் தெரிவித்த சில நிமிடங்களிலேயே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.