பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் ; டிரம்ப் திட்டவட்டம்
பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ள பனாமா கால்வாய், உலக கடல்சார் வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.
சுமார் 82 கிலோமீட்டர் நீளமுடைய இந்த கால்வாய் வழியாக உலகின் கடல்சார் வர்த்தகத்தின் சுமார் 5 சதவீதமும், அமெரிக்காவின் வர்த்தகத்தின் சுமார் 50 சதவீதமும் நடைபெறுகிறது என கூறப்படுகிறது.

அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த கால்வாய் நீண்ட காலம் அமெரிக்க நிர்வாகத்தில் இருந்த நிலையில், 1977ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 1999ஆம் ஆண்டு அதன் நிர்வாக உரிமை பனாமாவுக்கு வழங்கப்பட்டது.
தற்போது ஆண்டுதோறும் சுமார் 14,000 கப்பல்கள் இந்த கால்வாய் வழியாகச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற நூலக திறப்பு விழாவில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் நிர்வாகம் தொடர்பாக கடுமையான கருத்துகளை வெளியிட்டார். கடந்த காலத்தில் அமெரிக்கா இந்த கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவிடம் ஒப்படைத்தது “முட்டாள்தனமான தவறு” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பனாமா கால்வாயில் சீனா செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாகவும், அதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பனாமா நிர்வாகம் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகவும், அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பனாமா கால்வாயை சீனா கைப்பற்றும் எந்த முயற்சியும் தடுக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் உறுதியாக தெரிவித்தார்.