பிரான்ஸ் மக்களுக்கு அடித்த அதிஸ்டம்! மேலதிகமாக 1000 யூரோ
பிரான்ஸில் பசுமை சீரமைப்பு கொடுப்பனவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மேலதிகமாக 1000 யூரோ பெற தகுதி பெறுவார்கள் என பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி எரிவாயு அல்லது எண்ணெயில் இயங்கும் கொதிகலனை மிகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வெப்பமாக்கல் அமைப்பிற்கு மாற்றுவதற்கு உதவுவதற்காக இந்த பசுமை சீரமைப்பு கொடுப்பனவு வழங்கப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த 15ஆம் திகதி முதல் இந்த நடைமுறைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 1000 யூரோ மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை ரஷ்யா - உக்ரைன் போரினால் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எரிசக்தியை சமாளிப்பதற்கு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் பிரான்ஸில் எரிசக்தி செலவினங்களைக் குறைப்பதற்கும் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் பெறுவதனை நிறுத்துவதுமான இலக்காகக் கொண்ட பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் அரசாங்கம் இந்த பசுமை சீரமைப்பு நடவடிக்கையை அறிவித்தது.
அதற்கமைய பசுமை சீரமைப்பு திட்டத்திற்காக மேலதிகமாக வழங்கப்படும் 1000 யூரோ கொடுப்பனவு இந்த வருட கடைசி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது காற்றில் இருந்து நீரை வெப்பமாக்கும் பம்ப் நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு 10,000 முதல் 15,000 யூரோ வரை செலவிடப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுகின்றது.
இவ்வாறான நிலையில் , மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இதனை நிறுவுவதற்கு மொத்தமாக 8000 யூரோ கொடுப்பனவு வழங்கப்படுகின்ற நிலையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பம் இதனை நிறுவுவுதற்கு 7000 யூரோ வரை கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது.
இது வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே ஒரு குடும்பம் எவ்வளவு குறைவாக சம்பாதிக்கிறதோ அவ்வளவுக்கு அது தகுதியுடையதாகின்றது. அதேசமயம் அதிக சம்பாதிப்பவர்கள் கூட, சில கோட்பாடுகளின் கீழ் இந்த பணத்தை பெற தகுதியுள்ளவர்களாகின்றார்கள்.
அதேவேளை எரிவாயு கொதிகலன்களில் இருந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வெப்பமாக்கல் அமைப்பிற்கு மாற்றுவதால் வருடாந்திர எரிசக்தி கட்டணத்தை மூன்று மடங்கு குறைக்கும் என பிரான்ஸ் சுற்றுச்சூழல் மாற்றம் தொடர்பான அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.