கோடைக்கால முகாமில் சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட 46 வயது பெண் கைது
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 46 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.
நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள ஜான்ஸ்டன் பாயிண்ட் பகுதியில் இயங்கி வந்த கோடைக்கால முகாம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், அங்கிருந்த சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆகஸ்ட் 24ம் திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், செப்டம்பர் 8 அன்று போர்ட் எல்கின் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் வைத்து ஜெனிஃபர் காலன் அபோட் என்ற பெண்ணைக் கைது செய்தனர்.

செப்டம்பர் 9 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெனிஃபர் மீது மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் தாக்குதல், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தலையீடு, 16 வயதிற்குட்பட்ட சிறுவர் முன் அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது சில நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர், அக்டோபர் 7 அன்று மாங்க்டன் மாகாண நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் வேறு ஏதேனும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை எந்த நேரத்திலும் பொதுமக்கள் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள் உள்ளூர் காவல்துறையையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (1-800-222-8477) அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.