நோர்த் யார்க்கில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு – பதின்ம வயது சிறுவன் பலி
கனடாவின் டொரண்டோவிலுள்ள நோர்த் யார்க் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் ஜேன் வீதி மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் சந்திப்பிற்கு அருகில் இடம்பெற்றதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தபோது, துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டனர்.
உடனடியாக அவர் உள்ளூர் அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஆய்வாளர் டேன் பிரவிகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், ஒரு ஸ்கேட்போர்டை சுற்றி பொலிஸார் அடையாளக் குறிகளை அமைத்திருந்தனர்.
மேலும், நார்ஃபின்ச் ஓக்டேல் மற்றும் டிராஃப்ட்வுட் நிலையங்களுக்கு இடையே 'லைன் 6 LRT' ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மாற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், டொரண்டோ பொலிஸாரையோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.