விமானிகளின் வாழ்க்கைத் தொழிலை மாற்றிய கொரோனா!
பாதுகாப்பு சேவை நிறுவனத்திலும் வாகன சாரதியாகவும் பணியாற்றும் முன்னாள் விமானிகள்) உலகம் முழுவதும் கோரத்தாண்டவமாடும் கொரோனா தொற்றுநோயினால் உயிர்கள் பறிக்கப்படுவது மட்டுமல்லாமல் தொழில்வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி என பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டு செல்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் தொழில்களை இழந்து பரிதவிப்பதுடன் பல நூறு நிறுவனங்களில் சம்பளக் குறைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
எனினும் பல கல்வியியலாளர்கள், தொழில்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தொழில்களை இழந்தாலும்கூட எதிர்நீச்சல் போட்டு வேறு சாதாரண தொழில்களைப் பெற்று தமது வாழ்க்கையை நடத்துவதில் வெற்றிகாணவும் செய்துள்ளனர்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டு உலகம் முழுவதும் உள்ள விமான சேவை நிறுவனங்கள் நட்டமடைந்ததால் பலர் மாற்றுத் தொழில்களைத் தேட நேரிட்டது. பிரபல விமான சேவை நிறுவனமான தோமஸ் குக் நிறுவனத்தில் இரண்டு தசாப்தங்களாக விமானியாக தொழில் புரிந்துவந்த கிறிஸ்டோபர் பெய்லி 2019 செப்டெம்பர் மாதம் தனது தொழிலை இழந்தார்.
குறிப்பிட்ட நிறுவனம் வீழ்ச்சியடைந்ததால் அவர் தொழிலை இழக்க நேரிட்டது. ஆனால், அவர் நீண்டகாலம் தொழிலின்றி இருக்கவில்லை. ஒரு மாதம் கழித்து எமிரேட்ஸ் விமான சேவை தனது ஏயார்பஸ் ஏ380 விமானங்களில் அவரை விமானியாக ஒப்பந்தம் செய்தது.
இதற்கு அமைய அவர் 2020 ஜனவரி மாதத்திலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தில் விமானியாக தொழில்புரிந்துவந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனது குடும்பத்தை ஐக்கிய இராச்சியத்திலிருந்து துபாய்க்கு அழைத்துச்சென்று அங்கு வாழ்ந்துவந்தார்.