கனேடிய மாகாணம் ஒன்றில் கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல்: அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் திட்டங்கள்
கனேடிய மாகானமான ஒன்ராறியோவில் அடுத்த வாரத்தில் மேலும் சில கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளன.
ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, அடுத்த வாரம் இது குறித்த அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எங்கெல்லாம் தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தைக் காட்டினால் மட்டுமே செல்லமுடியுமோ, உதாரணமாக உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் போன்ற இடங்களிலெல்லாம் இத்தனைபேர்தான் அனுமதிக்கப்பட முடியும் என்றிருந்த எண்ணிக்கை கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒன்ராறியோ, தனது கட்டுப்பாடுகள் விலக்கலின் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறது. அடுத்ததாக தடுப்பூசியின் வெற்றி மற்றும் டெல்டா கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அடுத்த கட்ட திட்டம் வெளியிடப்பட இருப்பதாக அந்த அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கொரோனா முடிந்துபோனது என்பது போல நடித்து அனைத்துக் கட்டுப்பாடுகளும் மொத்தமாக விலக்கிக்கொள்ளப்படாது என்று கூறும் அந்த அலுவலர், கட்டிடங்களுக்குள் மாஸ்க் அணிவது போன்ற விதிகள் தொடரும் என்றார்.
வழிபாட்டுத்தலங்களில் எப்போது கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்பது குறித்தும் அந்த திட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தன் பெயரை வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொண்ட அந்த அலுவலர், குறிப்பாக இந்த திகதியில்தான் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படும் என நாள் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவும் மறுத்துவிட்டார்.