குவியல் குவியலாக சடலங்கள் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
சீன மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளின் படுக்கை அருகாமையில் குவியல் குவியலாக சடலங்கள் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹொங்ஹொங்கில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையிலேயே இவ்வாறு குவியலாக சடலங்கள் காணப்படும் புகைப்படங்கள் வெளியானது. குறித்த புகைப்படம் மார்ச் மாத தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொரோனா பாதிப்பால் நோயாளிகள் கடுமையாக அவதிப்படும் சூழலில், அவர்களின் படுக்கை அருகாமையில் சடலங்களை குவித்து வைத்திருப்பது, அந்த நோயாளிகளின் மன நிலையை பாதிக்க செய்யும் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.
ஹொங்ஹொங்கில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரித்து சீன அதிகாரிகளை போராட வைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை மட்டும் புதிதாக 29,381 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன், 196 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, குவியலாக சடலங்கள் காணப்பட்ட புகைப்படம் வெளியான நிலையில், பொதுமக்களிடம் இருந்து கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து , உடனடியாக அந்த சடலங்களை உரிய முறைப்படி அப்புறப்படுத்தியதாகவும், அவ்வாறான சூழல் உருவாகாமல் மருத்துவமனை நிர்வாகம் கவனம் செலுத்துவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று, உலகிலேயே அதிக கொரோனா மரணம் ஹொங்ஹொங்கில் பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியிட்ட நிலையில் மருத்துவமனை நிர்வாகிகள் தரப்பு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.