கொரோனா ஒருபக்கம்... வடகொரியாவில் மீண்டும் ஒரு காய்ச்சல் பரவல்
கொரோனா போன்று மேலும் ஒரு காய்ச்சல் வடகொரியாவில் பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் திடீரென்று கொரோனா பரவல் கண்டறியப்பட, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களுக்கு போதிய மருந்துகளை விநியோகிக்க ராணுவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேலும் 269,510 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகொரியாவில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 56 என அதிகரித்துள்ளது.
மேலும், ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து 1.48 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரிசோதனைக்கான போதிய கட்டமைப்புகள் ஏதும் வடகொரியாவில் இல்லை என்பதால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேருக்கு உண்மையில் கொரோனா பாதிப்பு என உறுதி செய்வது கடினம் என கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வரையில் குறைந்தது 663,910 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, அதன் 26 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் இல்லாததுடன், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நாட்பட்ட வறுமையிலும் நாடு சிக்கித் தவிக்கிறது.
இதனிடையே, வடகொரியா கொரோனா இறப்புகளை குறைத்து அறிக்கை செய்வதாக சில நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
போதிய மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை என்பதால், வரும் வாரங்களில் வடகொரியாவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.