அமெரிக்காவில் காதைப்பிளந்த சத்தம் ; நாசா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்திருப்பதாக நாசா பரபரப்பு தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
சூரியமண்டலத்தில் கோள்களை தவிர பிரம்மாண்ட விண்கற்களும் சூரியனை சுற்றி வருகின்றன. சில நேரங்களில் அவை பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு வளிமண்டலத்திற்குள் நுழையும். வளிமண்டலத்தில் உள்ள காற்றின் அடர்த்தி காரணமாக, அவை வேகமாக பயணிக்கும் போது தீப்பிடிக்கவே வாய்ப்பு அதிகம்.
இதனால் விண்கற்கள் பூமியின் தரைப்பரப்பை தொடுவது மிகவும் அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது , பூமியில் கடற்பரப்பு அதிகமாக இருப்பதால் இப்படியான விண்கற்கள் பெரும்பாலும் கடலிலேயே விழும். இவ்வாறான நிலையில் நேற்று அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியில் ஒரு விண்கல் விழுந்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ், லூசியானா மற்றும் மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாகாணங்களை சேர்ந்த மக்களில் சிலர் நேற்று காலை சுமார் 8 மணி அளவில் காதை பிளக்கும் அளவுக்கு சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த சத்தத்திற்கு அதிவேகத்தில் வந்து விழுந்த விண்கல் தான் காரணம் என நாசா தெரிவித்துள்ளது .
இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இதனை bolide என்று அழைக்கிறார்கள். 90 பவுண்ட் எடையும் ஒரு அடி அகலமும் கொண்ட இந்த கல் மணிக்கு 55,000 மைல் வேகத்தில் வந்து விழுந்திருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது.
லூசியானா மாகாணத்தின் மினோர்க்கா பகுதியில் விழுந்த இந்த கல் மூன்று டன் TNT ஏற்படுத்தக்கூடிய பலத்த சத்ததினை ஏற்படுத்தியதாகவும், அது விழுந்த சில நிமிடங்களில் 10 முழு நிலவுகளின் வெளிச்சத்தை தோற்றுவித்ததாகவும் நாசா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்,
" நேற்று காலை ஆரஞ்சு நிறத்தில் தீப்பிழம்பாக இருந்த பாஸ்கட்பால் போன்ற வடிவம் மிஸ்ஸிஸிப்பி நதியின் மேற்கு பகுதி நோக்கி சென்றது. அதன் பின்புறத்தில் வெள்ளை நிறத்தில் காட்சியளித்ததாக தெரிவித்தார்.
மிஸ்ஸிஸிப்பி அருகே கிராண்ட் வளைகுடா பகுதியில் இயங்கிவரும் அணுமின் நிலையம் தான் இந்த சத்தத்திற்கு காரணமா பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதன் பிறகு கிளைபோர்ன் கவுண்டி அவசரகால அமைப்பு நடந்தவற்றை மக்களிடம் விளக்கி மக்கள் யாரும் பயப்படவேண்டாம் என கேட்டுக்கொண்டதை அடுத்து அங்கு இயல்புநிலை திரும்பியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவில் சக்தி வாய்ந்த விண்கல் விழுந்த சம்பவம் குறித்து பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.