'Squid Game' தொடரால் மாணவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
வடகொரியா நாட்டில் மக்கள் வாழ்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் தொலைக்காட்சியை காண்பதற்கு கூட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மக்கள் திரைப்படங்களில் கூட இதனைக் காண வேண்டும் இதனைக் காண கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்மையில் Netflix-ல் சமீபத்தில் Squid Game என்ற தொடர் வெளியாகி, உலகில் பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த தொடருக்கு வடகொரியாவின் தடை விதிக்கபட்டிருந்தது.
இருப்பினும் மாணவன் ஒருவன் அந்த தொடரை பதிவிறக்கம் செய்து சகா மாணவர்களிடையே விற்று வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் வெளியான தகவலின் படி, பிடிபட்ட மாணவருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், தொடரை ரகசியமாகப் பார்த்த மேலும் 7 மாணவர்கள் தண்டிக்கப் பட்டுள்ளனர்.
இந்தத் தொடரின் நகலை வாங்கிய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அதைப் பார்த்த அவரது நண்பர்கள் ஐந்து பேர் கட்டாய உழைப்புக்கு (நிலக்கரி சுரங்கங்களில்) தண்டனை பெற்றுள்ளனர்.
நாட்டில் கண்டிப்பாக தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களைக் கண்டறிய அதிகாரிகள் பள்ளிகளைத் தேடி வருகின்றனர். ஏனென்றால், வடகொரியாவில் உள்ளவர்கள் இந்த தொடரை ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், சோதனைத் தேடுதல் தொடங்கிவிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த சட்டம் திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் இசை போன்ற மேற்கத்திய பொருட்களின் வருகையை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில், பிடிபடுபவர்களுக்கு மிகப்பெரிய அபராதம், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.