போப் பிரான்சிஸ் கருத்து: முற்றாக ஏற்க மறுத்த கனேடிய பூர்வக்குடி தலைவர்கள்
கனடாவில் 215 சிறார்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் போப் பிரான்சிஸ் கவலை கொள்வதாக தெரிவித்ததை பூர்வக்குடி தலைவர்கள் மற்றும் அந்த பள்ளியில் இருந்து உயிர் தப்பியவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபை இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.
ஞாயிறன்று செயின்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த பக்தர்களிடையே பேசும் போது, போப் பிரான்சிஸ், இதுவொரு துன்பியல் நிகழ்வு, அதில் தமக்கு வருத்தமிருப்பதாகவும், பூர்வக்குடி மக்களின் கலாச்சாரத்தையும் உரிமையையும் மதிப்பளிக்க வேண்டும் என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கனேடிய மக்கள் கோரிக்கை வைத்திருப்பது போன்று போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்க தவறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் தலைவர்களும் தேவாலய நிர்வாகிகளும் இணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்தார்.
ஆனால், வருத்தம் தெரிவிப்பது மட்டும் போதாது எனவும், போப் பிரான்சிஸ் கருத்தை முற்றாக ஏற்பதில்லை என பூவக்குடி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களின் வலியை அவர் உணரவில்லை என்றே தெரிய வருகிறது என பல தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.