ஜெர்மனி - டென்மார்க் நாடுகளுக்கு செல்ல வேண்டாம்! அமெரிக்க எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருதால் ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு அமெரிக்கர்கள் பயணிக்க வேண்டாம் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு கொரோனா வைரஸ் கால பயணத்தில் நான்காம் எண் எச்சரிக்கை நிலை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த இரு நாடுகளும் கொரோனா பரவலில் மிகவும் அபாயம் எனும் நிலையில் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா அபாய பிரிவில் ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், கிரீஸ், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து செக் குடியரசு, ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் உள்ளன.
இந்நிலையில், ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மேர்க்கெல், (Angela Merkel) கொரோனாவை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும், அண்டை நாடான ஆஸ்திரியாவில் முழுமையான பொதுமுடக்கம் நேற்று இருந்து (22) அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனியிலும் மீண்டும் பொதுமுடக்கம் கொண்டு வரப்படலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி எச்சரித்துள்ளார்.