கொரோனாவா? அப்படினா? கோமாவுக்குப் பிறகு இளைஞர் கேட்ட கேள்வியால் மருத்துவர்கள் ஷாக்!
இங்கிலாந்தில் விபத்து ஒன்றில் சிக்கி 11 மாதங்களாக கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர் கண்விழித்து கேட்ட கேள்வி மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா காரணமாக உலகமே ஸ்தம்பித்து போயுள்ள நிலையில் கொரோனா என்ற வார்த்தை தெரியாத பள்ளி சிறுவர்கள் கூட இருக்கமாட்டார்கள்.
ஆனால் 19 வயது இளைஞர் ஒருவர் கொரோனா என்றால் என்ன என்று கேள்விக்கேட்டு மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஜோசப் பிளாவில் என்ற அந்த 19 வயது இளைஞர் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்துள்ளார். \
இந்த சம்பவம் இங்கிலாந்தில் கொரோனா பரவல் தொடங்கி லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னர் நடந்த விபத்தானது கிட்டத்தட்ட 11 மாதங்களாக கோமாவில் இருந்த அவர் இப்போதுதான் கண்முழித்துள்ளார். இந்நிலையில் அப்போது மருத்துவமனையில் தன் அருகில் பெற்றோர்கள் இல்லாதது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது ‘கொரோனா அச்சத்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இல்லை.’ என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அப்போது அந்த இளைஞரோ ‘கொரோனா என்றால் என்ன?’ என்று மருத்துவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பியதைக் கேட்ட மருத்துவர்கள் திகைத்துப் போய், பின்னர் அந்த இளைஞருக்கு கொரோனா குறித்து தெளிவாக விளக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.