மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறி, சர்வதேச அளவில் தீவிர பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அண்மைய புள்ளிவிவரங்களின்படி, மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருமே பாதிக்கப்படுகின்ற போதிலும், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தீவிர காயமடையும் சம்பவங்கள் கிட்டத்தட்ட மும்மடங்காக உயர்ந்துள்ளன.

கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில் மின்சார ஸ்கூட்டர் விபத்துகள் தொடர்பாக 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2025 ஆம் ஆண்டில் மின்சார ஸ்கூட்டர்கள் அல்லது இ-பைக்குகளைப் பயன்படுத்திய 10 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கனடிய குழந்தைகள் நல கண்காணிப்பு திட்டம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
மறுபுறம், மின்சார ஸ்கூட்டர்களின் வேகம் கணிசமாக அதிகரித்து வருவதே விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என நுகர்வோர் அமைப்பான 'கான்ஸியூமர் ரிப்போர்ட்ஸ்' (Consumer Reports) நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022-இல் மணிக்கு 25 கி.மீ ஆக இருந்த ஸ்கூட்டர்களின் சராசரி வேகம், 2026-இல் மணிக்கு 32 கி.மீ ஆக உயர்ந்துள்ளது. தாம் சோதித்த 13 மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றைக் கூடப் பயன்படுத்தப் பரிந்துரைக்கவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
சோதனை ஓட்டத்தின்போதே இரண்டு அனுபவமிக்க ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டை இழந்து காயமடைந்தனர். பிரேக் பிடிக்கும் போது ஓட்டுநரின் உடல் எடை இயல்பாகவே முன்பக்க சக்கரத்திற்கு மாறுவதால், பின்பக்க சக்கரத்தின் பிடிமானம் குறைந்து வளைவுகளில் வாகனம் சறுக்கி விபத்து ஏற்படுவதாக வல்லுநர்கள் விளக்கமளிக்கின்றனர்.
இந்த விபத்துகளில் இருந்து தப்பிக்கத் தலைக்கவசம் (Helmet), முழங்கால் மற்றும் மணிக்கட்டு கவசங்களை அணிவது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, மூளையில் ஏற்படும் தீவிர காயங்களைத் தடுக்க தலைக்கவசம் கட்டாயம் என மருத்துவர் ரோசன்ஃபீல்ட் வலியுறுத்துகிறார்.
அதேபோல, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எந்த வயதினராக இருந்தாலும் வேகத்தைக் குறைத்து, ஹெட்போன் மற்றும் மொபைல் போன்களைத் தவிர்த்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
ஒன்டாரியோ போன்ற இடங்களில் பொதுச் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளில் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்ட சட்டப்படி அனுமதியில்லை என்ற போதிலும் பலர் அதை மீறி வருகின்றனர். எனவே, சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதே விபத்துகளைக் குறைக்க உதவும்.