விலைவாசி உயர்வு... நெருக்கடி: இலங்கை வழியில் மேலும் 69 நாடுகள்
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே போன்ற நெருக்கடியில் 69 நாடுகள் இருப்பதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உலக வங்கி, ஐக்கிய நாடுகள் மன்றம் போன்றவை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. உணவுத்தட்டுப்பாடு மட்டுமின்றி வரலாறு காணாத கடன் சுமையும் குறித்த நாடுகளை சுழற்றியடித்து வருவதாக கூறப்படுகிறது.
சுற்றுலா தொடர்பான மிக குறைவான வருவாயை மட்டுமே நம்பியிருந்த இலங்கை, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட நெருக்கடிகளால் கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, கடன் சுமை வேறு சில நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுக்கும் பிப்ரவரி 24ம் திகதிக்கு முன்னர் உலக வங்கி மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 70 நாடுகள் பெரும் கடன் சுமை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற சூழலில் சிக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நாடுகளில் 2022ல் இருந்தே பொருளாதாரம் அழியும் சூழலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐ.நா வெளியிட்டுள்ள பொருளாதாரம் சார்ந்த அறிக்கையில் 107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும், கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விலை அதிகரிக்கும். கடன் சுமையால் இந்த நாடுகளில் நிதிநிலை மோசமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் உள்ள 170 கோடி மக்கள் தொடர்புடைய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 69 நாடுகள் இலங்கை நிலையில் இருப்பதாகவும், அவையில் 25 நாடுகள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை எனவும், 25 நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளை சேர்ந்தவை எனவும், 19 லத்தின் அமெரிக்கா நாடுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.