சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு; தமிழர் பேரணியை முடக்க தீவிர முயற்சி!
தமிழ்மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச நீதிவேண்டி பொத்துவில் முதல் பொலிகண்டிவரை ஆரம்பமான போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தடைகளை தாண்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாகனத்தின் பக்க கண்ணாடி உடைந்துள்ளது. அத்துடன் வாகனத்திற்கு தீ மூட்டுவதை போல அச்சுறுத்தி, மண்ணெண்ணெய் போத்தலுடன் ஒருவர் வாகனத்தை நோக்கி ஓடி வர, வாகனத்திலிருந்து இறங்கி சிவாஜிலிங்கம் அவரை விரட்டிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
திருகோணமலைக்குள் பேரணியாக வரும் போராட்டக்காரர்கள் மீது சிங்கள பிரதேசமான சிறிமாபுர பகுதியில் இந்த தாக்குதல் நடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தற்போது திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, அங்கு பெரும் முறுகல் ஏற்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் தரப்பினருக்கும், ஏனைய தரப்பினருக்குமிடையில் மோதல் ஆரம்பித்தது. போராட்ட ஆரம்ப இடத்தில் இரு தரப்பும் பெரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டத்தில் குழப்பமான நிலைமையேற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குழப்பத்தில் ஈடுபடுவதாக மத தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் இன்று பேரணியில் கலந்து கொள்வார்கள். எனினும், இன்று முதல் பேரணியில் அரசியல் பிரமுகர்கள் முன்வரிசையில் கலந்து கொள்ள வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்திள்ளனர்.
தனிநபர் அரசியலை முன்னெடுக்காமல் இனத்தின் அரசியலை முன்னெடுப்போம் என நேற்றைய பேரணியின் முடிவில் வேலன் சுவாமிகள் சூசகமாக குறிப்பிட்ட்டுள்ளார்.
இன்று முதல், மத தலைவர்கள், சிவில் சமூகத்தினர் மட்டுமே முன்வரிசையில் செல்லவும், அதன் பின்னால் அரசியல்வாதிகள் செல்லவும் ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.