அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் மீண்டும் அதிகரிப்பு:
கனடியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தவிர்த்து வந்த நிலையில், ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது எல்லை தாண்டிய பயணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் கனடாவில் வசிக்கும் மக்கள் அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய பயணங்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு, அமெரிக்கப் பயணங்களின் எண்ணிக்கையில் இத்தகையதொரு அதிகரிப்பு பதிவாவது இதுவே முதல் முறையாகும். இந்த அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாக கார் மூலமான பயணங்கள் அமைந்துள்ளன.

கார் வழியிலான பயணங்கள் 8.1 சதவீதம் அதிகரித்து 1.5 மில்லியனை எட்டியுள்ளன. இதில் 65 சதவீதமானவை ஒரே நாளில் சென்று திரும்பிய குறுகிய காலப் பயணங்களாகும்.
அதேவேளையில், விமானம் மூலம் சென்று திரும்பிய பயணங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.1 சதவீதம் குறைந்து 805,900 ஆகப் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 2.4 மில்லியன் முறை கனடியர்கள் அமெரிக்கப் பயணங்களை மேற்கொண்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, கடந்த மார்ச் மாதத்தில் கனடியர்கள் அமெரிக்காவிலிருந்து 2.6 மில்லியன் பயணங்களை முடித்துத் திரும்பியிருந்தனர்.
இது முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 6.4 சதவீத வீழ்ச்சியாகக் கருதப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதத் தரவுகள் பயணங்கள் மீண்டும் வேகம் எடுப்பதைக் காட்டுகின்றன.