அமெரிக்க அரசாங்கத்திலிருந்து விலகுகின்றாரா எலான் மஸ்க்
அமெரிக்க அரசின் செலவை குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய தற்போதைய அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரசாரம் செய்தார். இதனையடுத்து டிரம்ப் பதவியேற்றதும், சிறந்த நிர்வாகத்திற்கான துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
சிறந்த நிர்வாகத்திற்கான துறை
இதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அவரின் பணி நாட்கள் 130 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசின் செலவுகளை குறைக்கும் வகையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம், ஊழியர்களை குறைப்பது உள்ளிட்டவற்றில் எலான் மஸ்க்கின் பங்கும் உள்ளது.
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. டெஸ்லா நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், எலான் மஸ்க்கிற்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் டெஸ்லா நிறுவன விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் எலான் மஸ்க் , நாள் ஒன்றுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பிட்ட 130 காலக்கெடுவுக்குள் பணப்பற்றாக்குறையை குறைப்பதற்கு தேவையான எங்களது அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம்.
தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும், முறைகேடுகளைக் கண்டறிந்து நிறுத்துவதும் தான் எங்கள் முதல்நோக்கம். இதற்காகவே நாங்கள் வேலை செய்து வருகிறோம். இந்த பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மே மாதம் நான் இந்த துறையில் இருந்து விலகலாம் என குறிப்பிட்டுள்ளார்.