கனடாவில் மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த இந்திய வம்சாவளியினர்: பிரபல கோடீஸ்வரரின் விமர்சனம்
கனடாவில் மருத்துவமனை ஒன்றின் அலட்சியத்தால் இந்திய வம்சாவளியினர் ஒருவர் உயிரிழந்த விடயம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க் அந்த விடயம் தொடர்பில் விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்!
மூன்று குழந்தைகளின் தந்தையும் இந்திய வம்சாவளியினருமான ப்ரஷாந்த் ஸ்ரீகுமார் (22) என்பவருக்கு, அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருக்கும்போது, இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் எட்மண்டனிலுள்ள Grey Nuns Hospital என்னும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் கடுமையான நெஞ்சு வலி வந்து துடித்த நிலையிலும், எட்டு மணி நேரமாக மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் அமரவைக்கப்பட்டுள்ளார்.
கடைசியாக மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதிக்க அழைத்துச் சென்ற சில விநாடிகளில் நெஞ்சைப் பிடித்தபடி சாய்ந்த ப்ரஷாந்த் உயிரிழந்துவிட்டார்.
ப்ரஷாந்த் மரணம் குறித்து பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எட்டு மணி நேரம் நெஞ்சு வலியால் துடிதுடித்து உயிரிழந்த நபரின் மனைவி, அநாகரீகமாக நடந்துகொண்டதாக அவரிடம் கூறப்பட்டதாக எக்ஸில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த இடுகைக்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், அரசு, மருத்துவ சேவையில் ஈடுபடும்போது, அது DMV போலத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
DMV என்பது, அமெரிக்காவின் மோட்டார் வாகனத் துறையைக் (Department of Motor Vehicles) குறிக்கும். அதாவது, அமெரிக்க மோட்டார் வாகனத் துறை, மிகவும் தாமதமாக செயல்படுவதாக மோசமான பெயர் பெற்றுள்ள துறை ஆகும்.
ஆக, அமெரிக்காவின் மோட்டார் வாகனத் துறையைப்போலவே, மருத்துவ சேவையும் தாமதமாக செயல்படுவதாக அமெரிக்க மருத்துவ சேவையை விமர்சித்துள்ளார் எலான் மஸ்க்.