நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் ; 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் தாக்கியுள்ள கடும் பனிப்புயல் காரணமாக நியூயார்க் மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளில் இல்லாத அளவு தீவிரமாக தாக்கி வரும் இந்த புயல், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. தேசிய வானிலை சேவை கடுமையான காற்றுடன் அதிக பனிப்பொழிவு ஏற்படும் ‘ப்ளிசார்டு’ எச்சரிக்கையை 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுத்துள்ளது.
பல பகுதிகளில் 3 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிப்புயலின் தாக்கத்தால் நியூ ஜெர்சி மாநிலத்திலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரம் மேயர் மம்தானி, அவசர சேவைகளைத் தவிர்த்து அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதித்துள்ளார். பொதுமக்கள் அவசியமில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரம் நகரின் முக்கிய விமான நிலையங்களில் 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 13,000-க்கும் அதிகமான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும், வடகிழக்கு அமெரிக்காவில் சுமார் 3.5 இலட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டன், மேரிலேன்ட் மற்றும் விர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனிப்புயல் வீசும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு அமெரிக்காவை 150 ஆண்டுகளில் இல்லாத அளவு தாக்கிய பனிப்புயலாக இது பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.