ஒன்டாரியோ மக்களுக்கு கனடா சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை
தெற்கு ஒன்டாரியோவின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அது குறித்து விசேட வானிலை அறிக்கையை கனடா சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று தெற்கு திசைக்கு மாறக்கூடும்.
இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும்.

தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று, திங்கள் இரவு மேற்கு திசைக்கு மாறக்கூடும். இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
திங்கட்கிழமை காலை இப்பகுதியைக் கடந்து செல்லும் குளிர் காற்று (Cold Front) காரணமாகவே மிக பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலத்த காற்றினால் மரக்கிளைகள் முறிந்து விழலாம் அல்லது பாதுகாப்பற்ற பொருட்கள் தூக்கி வீசப்படலாம். சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான (Utility outages) வாய்ப்புகள் உள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.