ரஷ்யாவின் கோரிக்கைக்கு அடிபணிந்த ஐரோப்பிய நாடுகள்!
பத்து ஐரோப்பிய எரிவாயு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து ரூபிளில் எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக ரஷிய எரிவாயு நிறுவனமான கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது.
ரஷியா உக்ரைன் போர் தொடர்ந்தும் 64வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் , அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெறப்படும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது.
அதேவேளை ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷியாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி செய்வதால் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு அந்நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் பல்கேரியா மற்றும் போலாந்து ரூபிளில் பணத்தை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து இரு நாடுகளுக்குமான எரிபொருள் விநியோகத்தை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அதேசமயம் பல்கேரியா மற்றும் போலாந்தை பொறுத்தவரை , போலந்து 53 சதவீத எரிவாயுவைவையும், பல்கேரியா 90 சதவீத எரிவாயுவையும் ரஷ்யாவிடமிருந்தே பெற்று வந்தது.
இந்நிலையில் 10 ஐரோப்பிய எரிவாயு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து ரூபிளில் எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக ரஷிய எரிவாயு நிறுவனம் கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 4 நிறுவனங்கள் ஏற்கனவே ரூபிளில் கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும் அவர்களுக்கு விரைவில் எரிவாயு விநியோகம் செய்யப்படும். ரூபிள் வர்த்தகத்திற்கு சம்மதிக்காத நாடுகளுக்கு விற்பனை நிறுத்தப்படும் எனவும் ரஷிய எரிவாயு நிறுவனம் கூறியுள்ளது.
அதேவேளை தற்போது 23 ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது