கனடாவில் போதைப் பொருள் கடத்தில் ஈடுபட்டதாக தமிழ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
டொராண்டோ தெற்கு தடுப்புக்காவல் மையத்தில் (TSDC) போதைப்பொருள், செல்போன்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றத்திற்காக யாது சத்தியகாந்தன் என்ற சிறைக்காவலருக்கு 26 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை பேண வேண்டிய ஒரு அதிகாரியே, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஜூன் மாதம் பணியில் சேர்ந்த யாது சத்தியகாந்தன், மிகக்குறுகிய காலத்திலேயே சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.

அக்டோபர் 2024-ல் கைதி ஒருவரின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில், இளஞ்சிவப்பு நிற காலுறைக்குள் (Pink sock) மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மற்றும் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மற்றொரு கைதியிடமிருந்து எம்.டி.எம்.ஏ (MDMA) மற்றும் ஹஷிஷ் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் யாது சத்தியகாந்தன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பின்வரும் பொருட்களை சிறைக்குள் கடத்தியது உறுதியானது:
MDMA, ஹஷிஷ், கஞ்சா மற்றும் வலிநிவாரண மாத்திரைகள் (Oxycodone, Hydromorphone), மெட்டல் டிடெக்டரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்ட 3 பீங்கான் கத்திகள் (Ceramic blades), செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள், இந்த கடத்தல் வேலைக்காக அவர் 15,000 டொலர் ரொக்கப்பணத்தைப் பெற்றுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹஃபீஸ் அமர்ஷி (Justice Hafeez Amarshi), யாதுவின் செயல் "நம்பிக்கை துரோகம்" என்று கடுமையாக சாடினார்.
"சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையில் இருந்தவர், அதற்கு நேர்மாறாக செயல்பட்டு ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளார்," என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
யாது சத்தியகாந்தன் நீதிமன்றத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், இது ஒரு "முட்டாள்தனமான மற்றும் தார்மீக ரீதியாக தவறான செயல்" என்று ஒப்புக்கொண்டார்.
காவலர்களே கடத்தலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களின் விலை வெளிச்சந்தையை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதால், இத்தகைய கடத்தல்கள் தொடர்வதாகக் கூறப்படுகிறது.
ஒன்ராறியோ தலைமை மரண விசாரணை அதிகாரி குழுவின் அறிக்கையின்படி, 2014 முதல் 2021 வரை சிறைக்காவலில் நிகழ்ந்த மரணங்களில் 40% போதைப்பொருள் நச்சுத்தன்மையால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.