111 ஆண்டுகளுக்கு முன் மாயமான ராணுவ அதிகாரியின் உடலை கொண்டு வர கனடியக் குடும்பம் போராட்டம்!
முதலாம் உலகப் போரில் உயிரிழந்து, 111 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்டறியப்படாமல் இருக்கும் கனடிய ராணுவ அதிகாரி ஒருவரின் உடலைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் கனடாவிற்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்டாரியோவின் சவுத்தாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த லெப்டினன்ட் லியோனல் ட்ரான்டர் என்பவர், 1915 ஜூன் 15 அன்று தனது 28-வது வயதில் முதலாம் உலகப் போரில் களம் இறங்கி உயிரிழந்தார். ஆனால், அவரது உடல் என்னவானது என்ற விவரம் தெரியாமல் அவர் மாயமானார்.
அவரது சொந்த ஊரில் அவருக்காக ஒரு வெற்று கல்லறை மட்டுமே நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவரது எள்ளுப் பேத்தி அலிசியா கூறுகையில், "அந்த வெற்று கல்லறைதான் எங்களுடன் பேசுகிறது.
அவர் வீட்டிற்கு எழுதிய உணர்வுபூர்வமான கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் தலைமுறை தலைமுறையாக எங்களிடம் உள்ளன.
அவர் மறைந்தது எங்கள் குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த உடலைத் தேடும் பணிக்காக, அகாடியா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பேராசிரியரான ஆரோன் டெய்லரின் உதவியை அலிசியா நாடியுள்ளார்.
பேராசிரியர் டெய்லர் ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்புத் துறைக்காகப் போரில் மாயமான வீரர்களைக் கண்டுபிடித்துத் தந்த அனுபவம் கொண்டவர்.
இதுவரை கிடைத்துள்ள போர் வரைபடங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள 'கிவென்சி' என்ற இடத்திற்கு அருகே உள்ள ஒரு வயல்வெளியில், அடையாளம் தெரியாத ஒரு கல்லறையில் ட்ரான்டர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பேராசிரியர் டெய்லர் கணித்துள்ளார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் 'கிரவுண்ட்-பெனட்ரேட்டிங் ரேடார்' போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் பிரான்ஸ் சென்று தேடத் திட்டமிட்டுள்ளார்.
பேராசிரியர் டெய்லர், முந்தைய போர்களில் காணாமல் போன வீரர்களின் குடும்பங்களுக்காக "கனடியன் ரிமெம்பரன்ஸ் அண்ட் ரிகவரி புராஜெக்ட்" என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
"முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் மற்றும் கொரியப் போர்களில் காணாமல் போன 27,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் இன்னும் உள்ளனர். அவர்களை எவ்வாறு தேட வேண்டும் என்ற தொழில்நுட்பம் நமக்குத் தெரியும்," என்று டெய்லர் கூறியுள்ளார்.
போரில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து மாயமான வீரர்களைத் தேடும் பணியை மத்திய அரசே முன்னின்று நடத்த வேண்டும் என்று அலிசியாவும் பேராசிரியரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்திடம் இருந்து இன்னும் முறையான பதில் கிடைக்காத நிலையில், நிதி திரட்டியாவது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று தங்கள் குடும்பப் பெரியவரின் உடலை கனடாவிற்கு கொண்டு வரப் போவதாக அலிசியா உறுதியுடன் தெரிவித்துள்ளார்.