கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியான இந்திய குடும்பம்... அடையாளம் காணும் பணி தீவிரம்
கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பலியான இந்திய குடும்பத்தினரை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கனடாவுக்கான இந்திய தூதர் சம்பவம் நடந்த மானிடோபா பகுதிக்கு சென்றுள்ளதாகவும், அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்திய குடியேற்றவாசிகளின் குழுவில் மரணமடைந்த நால்வரும் இருந்ததாக அமெரிக்க எல்லை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவர்களின் உறவினர்களை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மரணமடைந்தவர்களை அடையாளம் காணும் பணி முடிவடைந்தால், அவர்களின் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
எமர்சன் அருகே பனியில் உறைந்த நிலையில் ஒரு குழந்தை மற்றும் இளைனர் உட்பட நான்கு உடல்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன. பனியில் சிக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர். இருப்பினும் இதுவரை உடற்கூராய்வுக்கான முடிவுகள் வெளிவரவில்லை.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, சட்டவிரோதமாக எல்லையை கடப்பதன் மூலம் மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதைத் தடுக்க கனடா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தம்மை கடுந்துயரத்தில் ஆழ்த்திய சம்பவம் இதுவென குறிப்பிட்டுள்ள பிரதமர் ட்ரூடோ, இதனால்தான் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயற்சிப்பதை தடுக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்றார்.