நியூசிலாந்தில் முதல்முறையாக ஓமிக்ரோன் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு உறுதி!
நியூசிலாந்தில் ஓமிக்ரோனின் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 9 லட்சத்து 33 ஆயிரத்து 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
நியூசிலாந்தில் ஓமிக்ரோன் பிஏ.4 வகை கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வெளிநாடு ஒன்றிலிருந்து நியூசிலாந்து வந்த நபருக்கு இந்த ஓமிக்ரோனின் உருமாறிய வகை பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் வெளிநாட்டில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பிய இரண்டு பேரிடம் பிஏ.2.12.1 மற்றும் பிஏ 2.12.2 ஆகிய ஓமிக்ரோனின் இரு வகைகள் உறுதியாகி இருந்தன என்று அப்போது அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
கொரோனாவுக்கு கடந்த 2 நாட்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஓமிக்ரோனின் 3வது வகை உருமாறிய தொற்று அந்நாட்டில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் ஒன்று கூடுவதற்கு பெரிய கட்டுப்பாடுகள் இல்லாத சூழலில், அதிதீவிர பரவல் தன்மை கொண்ட ஓமிக்ரோனின் புதுப்புது வகைகள் அடுத்தடுத்து நியூசிலாந்தில் உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.