வரலாற்றில் முதல்முறையாக பெரும் சிக்கலை சந்தித்த பிரித்தானியா!
பிரித்தானியாவின் மீன் மற்றும் சிப் கடைகள் வரலாற்றில் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய அளவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையால் மூன்றில் ஒன்று மீன் மற்றும் சிப் கடைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்படலாம் என முன்னணி தொழில்துறை அமைப்பு எச்சரித்துள்ளது.
ஒட்டுமொத்த பிரித்தானியாவில் 10,500 மீன் மற்றும் சிப் கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் அவற்றில் சுமார் 3,500 கடைகள் எண்ணெய் விலை அதிகரிப்பதால் வணிகத்தை விட்டு வெளியேற நேரிடலாம் என கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் சூரியகாந்தி எண்ணெய் டிரம் ஒன்றின் விலை சுமார் £30ல் இருந்து £44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாற்றாக பயன்படுத்தப்பட்டு வந்த பாமாயில் மற்றும் ராப்சீட் எண்ணெய் விலைகளும் போர் காரணமாக அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் சூரியகாந்தி எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஒருபுறம் என்றால், பாமாயில் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது என்கிறார் வாரத்திற்கு 200 லிற்றர் சூரியகாந்தி எண்ணெய் கொள்வனவு மேற்கொள்ளும் மீன் மற்றும் சிப் கடை உரிமையாளர் ஒருவர்.
அது மட்டுமின்றி, போர் தொடங்கிய பின்னர் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட்ட மீன் மற்றும் சிப் கடைகள்.
கொரோனா பெருந்தொற்றால் கடும் பாதிப்பை ஏதிர்கொண்டு மீண்டுவர முயன்றுவரும் நிலையில், தற்போது ரஷ்ய போரினால் அதைவிட பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2019ல் உலகளாவிய சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் 48% அளவுக்கு உக்ரைன் மேற்கொள்கிறது.
இதே ஆண்டில் 24% அளவுக்கு ரஷ்யாவும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த வாரம், பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகள் தட்டுப்பாடு காரணமாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தலா இரண்டு போத்தல்கள் வழங்கத் தொடங்கின.
இதனிடையே, அதிகரித்து வரும் உள்நாட்டு விலையை சமாளிக்க பாமாயிலின் மீதான திடீர் ஏற்றுமதி தடையை திங்களன்று இந்தோனேசியா அறிவித்த பின்னர் இந்த விவகாரத்தில் மேலும் சிக்கல்கள் எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.