ஈரான் மீது கொடூர தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட்ட அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது இன்றிரவு மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என முன்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை தற்போது ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
போர் நிலைமையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட எச்சரிக்கைக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே இந்த புதிய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது சமூக ஊடகப் பதிவில் கருத்து வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த புதிய ராணுவ தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் அந்த நாட்டின் உயர்மட்ட தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நட்பு நாடுகள் இணைந்து கொள்கை ரீதியாகவும் விரிவான விவரங்களின் அடிப்படையிலும் பேச்சுவார்த்தை முன்னேற்றங்களை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலவீனமான நிலையில் உள்ள போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பான மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை. கடந்த சில வாரங்களாக மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் நிலைக்கு மிக அருகில் வந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தாலும், இதுவரை எந்த இறுதி உடன்பாடும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.