டொராண்டோவில் கனமழை: சுரங்கப்பாதை மற்றும் சாலைகளில் வெள்ளம்
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மியூசியம் சுரங்கப்பாதை நிலையத்தில் (Museum Station) வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு ரயில்கள் நிறுத்தப்படாமல் இயக்கப்பட்டன.
மழையினால் ஏற்பட்ட வெள்ளம் சாலைகளிலும் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டன.
நெடுஞ்சாலை 401-ல் கிப்ளிங் அவென்யூ அருகே தேங்கியிருந்த நீரில் சிக்கி இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பெயின் அவென்யூ, டாவ்ஸ் ரோடு மற்றும் ஆஸிங்டன் அவென்யூ போன்ற பகுதிகளிலும் வெள்ளம் பதிவாகியுள்ளது. இதனால் பல பேருந்து வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
மோசமான வானிலை காரணமாக விளையாட்டுப் போட்டிகளும் பாதிக்கப்பட்டன. பி.எம்.ஓ (BMO) மைதானத்தில் நடைபெறவிருந்த கனடா மற்றும் துனிசியா அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையினால் தாமதமாகத் தொடங்கியது.
புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வாரத்தின் எஞ்சிய நாட்களில் மீண்டும் மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வார இறுதியில் வெப்பநிலை 9 முதல் 10 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.