ஒன்ராறியோவில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
ஒன்ராறியோவில் பச்சிளம் குழந்தை தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தையை கடத்திய 70 வயது பெண்மணி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நுனாவூட்டிலிருந்து ஒட்டாவா பகுதிக்கு சென்றிருந்த தாயார் ஒருவரிடம் இருந்து வியாழக்கிழமை இரவு சுமார் 11.15 மணியளவில் பிஞ்சு குழந்தையை முகம் தெரியாத பெண்மணி ஒருவர் பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் உள்ள குழந்தை பெண் ஒருவரால் பறித்துச் செல்லப்பட்டதை அடுத்து, சுமார் 2 மணியளவில் பொலிசார் அம்பர் எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை பகல் 9.30 மணியளவில் குழந்தை கடத்தல் தொடர்பில் உறுதியான தகவல் கிடைத்ததை அடுத்து பொலிசார் விரைந்தனர்.
இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்கவே, பொலிசார் உள்ளே சென்று விசாரிக்கையில், அது கடத்தப்பட்ட குழந்தை என்பதை பொலிசார் அடையாளம் கண்டனர்.
இதனையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டதுடன், உடனடியாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தை பத்திரமாக இருப்பதாகவும், உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் 70 வயது பெண்மணியை கைது செய்துள்ளதுடன், கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், அவரது பெயர் மற்றும் கடத்தலுக்கான காரணம் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.