பிரான்ஸ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை; 500,000 யூரோவை இழந்த மூதாட்டி!
பிரான்ஸில் 83 வயதான ஓய்வு பெற்ற வயோதிப பெண் ஒருவர் தனது பணத்தை போலி வங்கியில் வைத்து 500,000 யூரோக்களை இழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பெண் கடந்த ஆண்டு, இணையத்தில் மிகவும் கவர்ச்சிகரமான கட்டணத்தில் சேமிப்புக் கணக்கைத் திறக்கும் திட்டங்களை முன்வைத்த வங்கி ஒன்றினை கண்டுபிடித்துள்ளார்.
வங்கியின் விளம்பரத்தை பார்த்த 83 வயதான ஓய்வு பெற்ற பெண் தனக்கு ஒரு நல்ல சேமிப்பு திட்டம் கிடைத்துள்ளதென மகிழ்வுடன் எண்ணியுள்ளார். அதற்கமைய, அவர் வங்கியின் இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு மேலதிக தகவல்களை பெற்று , தனது குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்து அதில் கிடைத்த 500,000 யூரோ பணத்தை அந்த வங்கியில் வைப்பு செய்துள்ளார்.
குறித்த வங்கியினால் அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்ட முத்திரைகளும் இருந்தமையினால் மூதாட்டி அதனை சிறந்த வங்கி என எண்ணியுள்ளார். டச்சு நாட்டை சேர்ந்த இந்த வங்கி பிரான்ஸில் கிளைகளை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூதாட்டி பணம் வைப்பு செய்யப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் வங்கியின் தொலைபேசி சேவையை அடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர் உதவி பிரிவினரால் தொலைபேசிக்கு பதில் கொடுக்காமையினால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதனை அந்த மூதாட்டி உணர்ந்துள்ளார்.
கடைசி காலத்தில் கிடைக்கும் வட்டி பணத்தில் வாழ்ந்து விட்டு அந்த பணத்தை தனது குடும்பத்திற்காக சேமித்து வைப்போம் என எண்ணியவர் ஏமாற்றப்பட்டுள்ளதனை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்வாறான கவர்ச்சிகரமான வட்டிக்கு ஏமாற வேண்டாம் என எச்சரித்த பொலிஸார், வயோதிப பெண் போன்று பலரை இந்த மோசடி வங்கி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட வங்கிகளில் மாத்திரம் வைப்பிடுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.