சுவிஸ் குடும்பங்களினால் தத்தெடுக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் அரசு
சுவிட்சர்லாந்து குடும்பங்களினால் சட்டத்திற்கு முரணான வகையில் தத்து எடுக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவிகள் வழங்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்து மத்திய அரசாங்கமும், கான்டன் அரசாங்கங்களும் கூட்டாக இணைந்து இந்த உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தத்து எடுக்கப்பட்ட இலங்கையர்கள் தங்களது பூர்வீகத்தை கண்டறிந்து கொள்வதற்கு பல்வேறு வழிகளில் உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைக்காக சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரண்டரை லட்சம் சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
பெக் டு த ரூட்ஸ் என்ற அமைப்பினால் இலங்கையர்களுக்கு உதவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்து குடும்பங்களினால் சட்டவிரோதமான முறையில் தத்து எடுத்து வளர்க்கப்பட்டு வரும் இலங்கையர்களுக்கு தகவல்களையும் ஆலோசனைகளையும் இந்த நிறுவனம் வழங்க உள்ளது.
இலங்கையில் தனது உறவினை தேடி அறிந்து கொள்வதற்கும் அவர்களுடன் மீள தொடர்புகளை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
1970ம் ஆண்டு முதல் 1990கள் வரையிலான காலப் பகுதியில் 900 இலங்கைப் பிள்ளைகள் சட்டவிரோதமான முறையில் சுவிஸ் குடும்பங்களினால் தத்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைக்காக சுவிட்சர்லாந்து அரசாங்கம் கடந்த 2020ம் ஆண்டு அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பிறந்த அல்லது இள வயது பிள்ளைகளை சுவிட்சர்லாந்து பெற்றோர் 5000 பிராங்குகள் முதல் 15000 பிராங்க்கள் வரையில் செலுத்தி தத்தெடுத்துள்ளனர்.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சிறார்கள் தத்தெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பான குழு சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.