மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு; உலகத் தமிழர் பேரவைக்கு கரி ஆனந்தசங்கரி கண்டனம்!
உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் , அமைச்சர் கரி ஆனந்தசங்கரிசுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முயற்சி பாரிய தவறு
இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புகள், இலங்கை தமிழர்களுடன் கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பாரிய தவறு என்றும் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஈழத்தில் தாய்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதாக இந்த அமைப்புகள் கூறுவதன் மீதும் இருந்த நம்பிக்கையை, இந்த சம்பவம் இழக்கச் செய்துள்ளதாக கரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.