சிரிய இராணுவஅதிகாரி தொடர்பில் ஜேர்மனி நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சிரியா இராணுவ அதிகாரியொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் ஆயுள்தண்டனையை வழங்கியுள்ளது.
சிரியாவின் பூமியில் நரகம் என அழைக்கப்படும் சிறையில் 4000க்கும் அதிகமானவர்களை சித்திரவதை செய்த குற்றத்திற்காக அன்வர் ரஸ்லான் என்ற இராணுவ அதிகாரிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள்தண்டனையை வழங்கியுள்ளது.
சிரியாவில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சித்திரவதைகளிற்கு எதிரான முதலாவது வழக்கு இது ஆகும்.
ஜேர்மனியில் அரசியல் புகலிடம் கோரியிருந்த ரஸ்லான் 2019 இல் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்ததுடன் கைதிகள் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டமைக்கும் தனக்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்திருந்தார்.
அத்துடன் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களிற்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை பல காரணங்களிற்காக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. சிரிய அரசாங்கத்தின் சித்திரவதைகளை விசாரணைக்கு உட்படுத்தியதில் அது முன்னர் ஒருபோதும் இடம்பெறாததாக காணப்பட்டது.
தங்கள் நாட்டிலிருந்து தப்பிவெளியேறிய ஆயிரக்கணக்கான சிரியர்கள் காரணமாகவே இது சாத்தியமானது. ஜேர்மனியில் வசிக்கும் 800.000 சிரிய மக்கள் அசாத்தினை எதிர்த்தவர்களிற்கு என்ன நடந்தது என் துயரமும் வலியும் வேதனையும் நிறைந்த கதைகளை கொண்டுவந்தனர்.
ஜேர்மனியின் நீதிதுறையினர் சர்வதேச நியாயாதிக்க எல்லையை பயன்படுத்தி நீதி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். சர்வதேச நியாயாதிக்க எல்லை ஒரு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அநீதிகள் குறித்து மற்றுமொரு நாட்டில் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.
ரஸ்லானிற்கு எதிராக 58 கொலைக்குற்றச்சாட்டுகளும் பாலியல்வன்முறை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளும்2011 முதல2012 முதல் 4000 பேரை சித்திரவதை குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
அல் கட்டிப் சிறைச்சாலையிலிருந்து தப்பியவர்களிற்கும் சாட்சியங்களை அளித்தவர்களிற்கும் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
இந்த தீர்ப்பின் மூலம் சிரியா அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது என்பதை குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக்கொணடுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.