ஹண்டாவைரஸ் கப்பலில் இருந்து தப்பிய பிரிட்டிஸ் பயணி மாயம்; WHO அதிர்ச்சி!
அட்லாண்டிக் கடலில் கப்பலில் பரவிய ஹண்டாவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடப்பட்டபோது பிரிட்டிஷ் பயணி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூர்அப்படுகின்றது.
பிரிட்டிஷ் பயணிக்கு தொற்று இருப்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் இருந்தபோதிலும், அதிகாரிகளின் கண்ணில் படாமல் அவர் மாயமாகியிருப்பது உலக சுகாதார அமைப்பை (WHO) அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தப்பிய பயணி தற்போது எங்கே இருக்கிறார்?
குறித்த பயணி தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியாததால், பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்க பாதுகாப்புத் துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், கப்பலில் இந்தத் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மற்றொரு பயணி இன்று அதிகாலை உயிரிழந்ததை அடுத்து, கப்பலில் உள்ள மற்ற பயணிகள் கடும் பீதியில் உள்ளனர். இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தீவிர காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்து வெளியேறிய அந்தப் பயணி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியிருந்தால், இந்த அபாயகரமான ‘ஆண்டிஸ் வைரஸ்’ (Andes Virus) வகை மனிதர்களிடையே வேகமாகப் பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாயமான அந்தப் பயணி, கப்பலில் இருந்து தப்பி விமானம் மூலம் லண்டன் செல்லத் திட்டமிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
“ஒரே ஒரு நபர் மூலம் இந்தத் தொற்று ஒரு பெரிய சமூகப் பரவலாக மாற வாய்ப்புள்ளது; எனவே அவர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்” எனப் பிரிட்டிஷ் சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளை கப்பல் நிர்வாகம் முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாததே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்குக் காரணம் எனச் சக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஸ்பெயினின் கேனரி தீவுகள் மற்றும் செனகல் நாடுகள் இந்தக் கப்பலைத் தங்கள் எல்லைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டன. நடுக்கடலில் தவித்து வரும் 140-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) கப்பலுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் மாயமான அந்தப் பிரிட்டிஷ் நபர் தொடர்பில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.